Subscribe

BREAKING NEWS

31 July 2017

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு

TUT தள வாசகர்களே.!


இந்த ஆடி மாதம் அன்னையின் அருளை அனைவரும் பெற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்.அவரின்றி ஓர் அணுவும் அசையாது.அவர், அவள் பால் வசம் அன்றோ? சக்தி இன்றி சிவம் ஏது ? இந்த ஆடி மாத கொண்டாட்டத்தில் மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக உழவாரப்பணி அறிவிப்பு இந்தப் பதிவின் இறுதியில் வெளியிடுகின்றோம்.அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்புச் சேர்க்கும் வண்ணம் அவர் அருளாலே அவர் தாள் வணங்கி கேட்டுக் கொள்கின்றோம்.

சித்தர் மற்றும் மகான்களின் வழிபாடு ஏன்? ஏற்கனவே நமக்கு நன்றாகத் தெரியும்.குருவருள் இன்றி திருவருள் கிட்டாது.குரு தான் நமக்கு இறைவனை சரியாக தொட்டுக் காட்டுவார்.அந்த குரு நிலையில் நமக்கு பற்பல மகான்களும்,சித்தர்களும் நிலை பெறுகின்றார்கள். அதனால் தான் சித்தர்கள் வழிபாடு, சித்தர்களின் மூச்சுக் காற்று பற்ற மலை ஏற்றம் என்று நாம் பயணிக்கின்றோம்.

என்ன தான் நாம் ஜாதகம் போன்ற பல வழிகளில் நாம் முயற்சித்தாலும், நமக்குள்ளே உள்ள கர்ம வினைகளை பொசுக்கும் ஆற்றல் இந்த குருமார்களுக்கு உண்டு.இந்த வகையில் ஒவ்வொரு சித்தர்களும் பிரசித்தி பெற்றவர்கள். திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் என்று சொல்கின்றோமே ? ஏன்  தெரியுமா? அங்கு நிலை பெற்று செல்வ வளம் அள்ளி அள்ளிக் கொடுத்துக்கொண்டு இருப்பவர் கொங்கணவர். இதுபோல் போகர் பழனி மலையில் நோய் தீர்க்க அருள்பாலிக்கின்றார்.

இது தான் சித்தர்களின் அருள் நிலை. இது போன்ற ஒரு சித்தர் தான் குழந்தை வேலர். சென்னையை கோவில் நகரம்  சொல்லலாம். மயிலை,குன்றத்தூர்,திருஒற்றியூர் என சென்னையின் கோவில் நகரங்களை பகுக்கலாம்.ஒவ்வொன்றும் பற்பல சிறப்புகளை உள்ளடக்கியது. கயிலையே மயிலை.மயிலையே  கயிலை என்ற சிறப்பு பெற்ற மயிலையில், உள்ள ஒரு சித்தர் கோவில் தான் இது. அவர் வேறு யாருமல்லர்..குழந்தை வேலர் சுவாமிகளே ஆவார்.



இவர் ஜாதகத்தையே மாற்றும் வல்லமை கொண்டவர். மூன்று முறை சென்று வந்திருக்கின்றோம். மனம் அமைதி பெறுகின்றது.நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் இவர் சிறந்தவர். கடவுள் என்பது கற்றுக் கொள்ளவேண்டிய பொருள் அல்ல.தானாக உணர வேண்டிய உன்னதம் என்பது போன்ற அருட் கருத்துக்களை இங்கே உணர முடிகின்றது.

அடியேன் கேள்விப்பட்ட வரை ஜாதங்களில் மிகப்பெரிய அளவில் தோஷங்கள் இருந்த பலர். இவரை வழிபட்ட பின் அந்த தோஷங்கள் யாவும் நீங்கி இன்று மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  தினமும் நவசிவாய மந்திரத்தை ஒரு 5 முறையேனும் சொல்லும் அடியார்கள். சித்தர்களையும் வழிபடுவார்களே ஆயின். அந்த அடியார்களின் ஜாதகம் மாறி விடும். நல்ல விதமாக.

பக்தியோடு சிவனின் திருவடிகளை தொழும் அடியார்கள் யார் எல்லாம் இந்த குழந்தைவேல் சித்தரை தொழுகிறார்களோ. அத்தகைய சிவனடியார்களுக்கு  கோள்களால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தையும் நீக்குவதில் இந்த சித்தர் வல்லவர்.

குழந்தைவேல் சுவாமிகள், சித்தரை மாதம் 13-ம் நாள் பூச நட்சத்திரத்தில் ஜீவ சமாதியடைந்தார். ஜீவசமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அவரது சீடரான முத்தையா சுவாமிகள், எப்பொதும் தமது குருவைத் தொழுதுகொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பியதால் அவரது சமாதி குழந்தைவேல் சுவாமிகள் சமாதியின் முன் அமையப் பெற்றிருக்கிறது. அவரது விருப்பப்படி அவரது சமாதியின் மீது நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.



சற்று சுருக்கமாக ஆலய வழிபாட்டைக் காணலாம். இந்த திருக்கோவில் மூர்த்தி சிறிது,கீர்த்தி பெரிது என்பதைத் தான் நினைவுறுத்தும். சிறிய கோவில்,ஆனால் அளப்பரிய ஆற்றல் தருகின்றது.கோவில் உள்ளே நுழைந்ததும்,நேரே நம்மை நந்தி வரவேற்கிறார்.நந்திக்கு இடப் பபுறமாக வினைகளை தீர்க்கும் விநாயகர் அருள்பாலிக்கின்றார்.அருகிலே குழந்தைவேலர் உருவில் இருக்கின்றார்.தங்களின் பார்வைக்காக !




நந்திக்கு நேராக குழந்தைவேலர் அருவுருவில் வீற்றிருக்கின்றார்.கண் குளிர தரிசித்தோம்.பக்கத்திலேயே குருக்கள் வீடு உள்ளது.அவரின் நேரம் பார்த்து பேசி விட்டு சென்றால்,கண்டிப்பாக தீபாராதனை நமக்கு கிடைக்கும்.கோவில் பார்ப்பதற்கு பூச்சுக்கள் உரிந்து காணப்படுகின்றது.எனவே தான் இங்கே நாம் உழவாரப்பணி செய்ய குருவிடம் வேண்டினோம்.




நந்தி தரிசனம் 



குழந்தை வேலர் தரிசனம் 


குழந்தை வேலர் தரிசனம் முடித்து சற்று அமர்ந்தோம். மனம் ஒடுங்கியதும். எண்ணங்களின் வேகம் குறைந்தது. கடலிலே ஆர்ப்பரிக்கும் அலைகள் கரையோரம் அமைதியாய் கரை ஒதுங்குவது போல்,மனதில் எழுந்த எண்ணங்கள் சற்று அமைதி அடைந்தது. இது ஆரம்ப நிலை தான். ஆரம்ப நிலையே இப்படி ஒரு அனுபவம் என்றால் அதீத உள்முக நிலைகளை என்று அனுபவிக்க போகிறோம் என்று தெரியவில்லை. பின் கண் திறந்து,குழந்தைவேலரிடம் நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தோம்.


இது போன்ற பதிவுகளை அனைவருக்கும் தர வேண்டும் என்று விரும்பியே நாம் சித்தர் அருள் பெற நினைக்கின்றோம். இங்கு உழவார பணி செய்ய முடிவானதும், குருக்களை சென்ற வாரம் சந்தித்து பேசி, ஏகப்பட்ட செய்திகளை,பல வண்ணப்படங்களோடு அள்ளிக் கொண்டு வந்தோம்.ஆனால் சில தொழில்நுட்ப பிரச்சினைகளால் ( அலைபேசி மாற்றல் காரணமாக ) அனைத்தும் வீணாக சென்று விட்டது. நாங்கள் இருவர் (நானும்,சந்திரசேகரன் அண்ணாவும் ) அனுபவித்த இன்பத்தை மேற்கொண்டு இங்கே பகிர முடியாதது சற்று மன வருத்தத்தை தருகின்றது. இப்போது தான் புரிகின்றது காரணமின்றி காரியமில்லை. இன்னும் குழந்தைவேலர் தன்னை முழுதும் வெளிக் கொணர விரும்பவில்லை போலும் என்று உணர்ந்தோம்.

ஆனால் கண்டிப்பாக அடுத்து வரும் பதிவுகளில்,இன்னும் பற்பல தகவல்களை மெருகூட்டி தருகின்றோம்.அதுவரை வாசகர்கள் அவரிடம் பிரார்த்திக்கவும்.




எப்படி செல்வது?

மயிலாப்பூர் டேங்க்( கபாலீஸ்வரர்) பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். பின்பு அங்கிருந்து தெற்கு மாட வீதியில் நேரே நடக்கவும்.குளம் தாண்டியும் நடக்க வேண்டும். லட்சுமி பவன் தாண்டி,அங்கே வலது புறமாக ஒரு தெரு பிரியும்.அந்த தெரு சித்திரக் குளம் மேற்கு தெரு.ஆரம்பத்திலேயே சில பூக்கடைகள் காணப் படும்.




சித்திரக் குளம் மேற்கு தெரு வழியாக சற்று தூரம் நடந்தால்,அங்கே வலது புறமாக ஒரு தெரு பிரியும்.அந்த தெரு வழியாக சென்றால் உங்களுக்கு கோவில் தெரியும். கோவில் அறிவிப்பு பலகை தெரியம். தங்களின் வசதிக்காக கூகுளை வழிகாட்டி இணைப்பு படங்கள் இணைத்துள்ளோம்.






                                                          கோவில் அறிவிப்பு பலகை 


உழவாரப் பணி மற்றும் கூட்டு வழிபாடு அறிவிப்பு:

ஏவிளம்பி வருட ஆடி மாத உத்திராடம்  நட்சத்திர நாளில் (06/08/2017) ஞாயிற்றுக்கிழமை அன்று நம் குழுவின் சார்பாக உழவாரப் பணி மற்றும் கூட்டு வழிபாடு மயிலாப்பூரில்  உள்ளகுழந்தைவேலர்  சுவாமிகள் திருக்கோவிலில்  நடைபெற உள்ளது.இறை அன்பர்கள் தங்கள் வருகையை 7904612352 /  96772 67266⁠ எண்களில் உறுதி செய்யவும்.மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை பார்க்கவும்.



வரும் அன்பர்கள் தங்களால் முடிந்த அளவு நல்லெண்ணெய் வாங்கி வரவும்.மதிய உணவு மற்றும் இன்ன பிற ஏற்பாடுகளுக்காக அன்பர்களின் எண்ணிக்கை தேவைப்படுகின்றது.எனவே மறவாது தங்கள் வருகையை அலைபேசி மூலம் உறுதிப்படுத்தவும்.

அனைவரும் வருக ! இறை அருள் பெறுக !!

முந்தைய பதிவிற்கு :-

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்...http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html





30 July 2017

நாலு பேரு சொல்றத கேளுங்க


நான்கு என்ற சொல்லுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பல விடயங்கள் இந்த நான்கில் அமைவதைக் காணலாம். திசைகள் நான்கு. வேதங்கள் நான்கு. பிரமனுக்கு முகங்கள் நான்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் நான்கு. சமயக் குரவர்கள் நால்வர். சந்தான குரவர்கள் நால்வர். தனு, கரண, புவன, போகங்கள் நான்கு. கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என யுகங்கள் நான்கு. தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என மார்க்கங்கள் நான்கு. சரியை, கிரியை, யோகம், ஞானம் என சைவ நெறிகள் நான்கு. சாலோகம், சாரூபம், சாமீபம், சாயுச்சியம் என முத்தி நிலைகள் நான்கு. சனகர், சனந்தர், சனாதனர், சனற்குமாரர் என இறைவனிடம் உபதேசம் கேட்டவர்கள் நால்வர். இப்படி பல விடயங்கள் இந்த நாலில் அடக்கம். நாலு பேர் போன வழியிலே போ என்பார்கள்.

நாலு பேரு சொல்றத கேளுங்க

இது வழக்கமா எப்பவுமே கேட்குற மாதிரி இருக்கும். அந்த காலத்துல இதைத்தான் சொல்லுவாங்க.யாருப்பா அந்த நாலு பேருன்னு நமக்கு நினைக்க தோணும்.பக்கத்து வீட்டுக்காரன்,எதிர்த்த வீட்டுக்காரன் அப்படி,இப்படி னு நாலு பேரா இருக்குமோனு நினைக்கிறோம்.ஏற்கனவே பக்கத்து வீட்டுக்காரங்களை பார்த்து தான் நாம் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.எங்க ? நாம நம்ம வாழ்க்கையை வாழுறோம்? அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

இங்க நாம சொல்ல வர்ற நாலு பேரு யாருன்னு கேட்டா? இவங்க இல்லன்னா சிவம் இல்லை ன்னு சொல்ற அளவுக்கு பக்தி நெறி மட்டும் காட்டாம முக்தி நெறி காட்டுனவங்க தான் இவங்க.புரிஞ்சு இருக்கும் னு நினைக்கிறோம். இவங்கள கெட்டியா பிடிச்சுக்குவோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சிவ புண்ணியம் செய்தவங்க. இவர்களோட அடியொற்றி நாமும் இனிமே நமது கடமைகளை செய்ய முயற்சி செய்யணும்.

நால்வர் துதியோடு பதிவிற்குள் செல்வோமா?

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
- உமாபதி சிவாச்சாரியார்




 இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும்.
சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.

1.பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
இந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும்.
பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்), வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் ( சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.

2.ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி :
இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்."கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.." என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.

3.வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி :
திரு நாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.
இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா !) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.

4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி :
உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.



இப்போது புரியும்னு நெனைக்கின்றோம். அந்த நாலு பேரு வேறு யாரும் அல்ல. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்.இவற்றை எல்லாம் நாம் பருகித் திளைக்க வேண்டும். நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.நமக்கே தெரியாத போது ? ஹி ..ஹி ..எப்படி சொல்வது என கேட்கிறீர்கள் தானே? அதனால் தான் சொல்கின்றோம் நம் மரபு,சமூகம்,பண்பாடு,கலாச்சாரம் நோக்கி கொஞ்சமாவது திரும்பி பார்க்க வேணும். அப்படி பார்த்தல் தான் இது போன்ற செய்திகளை நாம் அறிந்து,உணர முடியும்.



சரி. ஒவ்வொருவரைப் பற்றியும் சில குறிப்புகளால் உணர்வோம்.திருநாவுக்கரசு சுவாமிகளின் சில பாடல்கள் (ஒலி வடிவில்) – வரலாற்றுமுறையில். திருவதிகையில் தொடங்கி திருப்புகலூர் வரை அவர் பாடிய தீஞ்சுவைப் பாடல்களைக் கேட்டு இறைவனே மெய் மறந்து இருக்கிறான் என்றால் நம்முடைய நிலை என்ன? அவர் பாடுவதைக் கேட்டுக்கொண்டே அவர் பின் புகுவோம் வாரீர் !!






திருநாவுக்கரசர் (வாகீசர்)


தந்தையார் : புகழனார்

தாயார் : மாதினியார்

தமக்கையார் : திலகவதியார்

அவதாரம் செய்த நாடு : திருமுனைப்பாடி (கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு)

அவதாரம் செய்த தலம் : திருவாமூர் (கடலூர் மாவட்டம், பண்ருட்டியிலிருந்து மேற்கே 8 கி.மீ.)

பெற்றோர் இட்ட பெயர் : மருள்நீக்கியார்

சமணசமயத்தில் வைத்த பெயர் : தருமசேனர்

இறைவன் சூட்டிய திருநாமம் : திருநாவுக்கரசர்

திருஞானசம்பந்தர் அழைத்தது : அப்பர்

சேக்கிழார் பெருமான் இட்ட பெயர் : வாகீசர்

ஏனைய பெயர்கள் : உழவாரப்படையாளி, தாண்டகவேந்தர், ஆளுடை அரசு

காலம் : கி.பி. 6 ஆம் நூற்றாண்டு

பின்பற்றிய நெறி : அடிமை நெறி (தாசமார்க்கம்)

உலகில் நிலவிய காலம் : 81 ஆண்டுகள்

ஆக்கிய திருமுறைகள் : நான்கு, ஐந்து, ஆறு

அருளிய நூல் : தேவாரம்

பாடிய பதிகங்கள் : 4900

பாடல்களின் எண்ணிக்கை : 49000

கிடைத்த பதிகங்கள் : 312

கிடைத்த பாடல்கள் : 3066

நான்காம் திருமுறை (விருத்தம்) : 113 பதிகங்கள் (1070 பாடல்கள்)

ஐந்தாம் திருமுறை (குறுந்தொகை) : 100 பதிகங்கள் (1015 பாடல்கள்)

ஆறாம் திருமுறை (தாண்டகம்) : 099 பதிகங்கள் (0981 பாடல்கள்)

முதல் பாடல் : கூற்றாயினவாறு எனத்தொடங்கும் பாடல்

இறுதிப் பாடல் : ஒருவனையும் அல்லாது எனத்தொடங்கும்பாடல்

முக்தி அடைந்த தலம் : திருப்புகலூர் (நாகை மாவட்டம், நன்னிலம்
                                    – நாகை சாலையில் உள்ள தலம்

சமகால நாயன்மார்கள் : திருஞானசம்பந்தர், அப்பூதியடிகள்,
  திருநீலகண்டயாழ்ப்பாணர், குலச்சிறையார், மங்கையர்க்கரசியார், முருக நாயனார்,
                                    திருநீலநக்கர்

இறைவன் திருவடியில்
இணைந்த நட்சத்திரம் : சித்திரை மாதம் சதய நட்சத்திரம்



திருநாவுக்கரசர் வாழ்வில் நிகழ்ந்த திருவருள் நிகழ்ச்சிகள்

பண்ருட்டிக்கு அருகே திருவதிகையில் தமக்கையார் திருநீறிட,
"கூற்றாயினவாறு" எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறையருளால் சூலை நோய் நீங்கபெற்றார் – 4 ஆம் திருமுறை, முதல் பதிகம், முதல் பாடல்

நீற்றறையில் சிதைவேதுமுறாது ஐந்தெழுத்து ஓதி அமர்ந்திருந்தார்
"ஐயர் திருவடி நீழல் அருளாகிக் குளிர்ந்ததே" – பெ.பு. 1368

சமணர்களால் இவருக்கு ஊட்டப்பட்ட நஞ்சு அமுதமானது
"நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே" – நான்காம் திருமுறை, 70 ஆவது பதிகம், 5 ஆவது பாடல்

சமணர்கள் ஏவிய யானை இவரைக் கொல்லாமல் வணங்கிச் சென்றது
"கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே" – 5-91-5

சமணர்கள் இவரைக் கல்லோடு கட்டி கடலில் எறிந்தபோது கல் தெப்பமாக மாறி கரை அடைந்தார்
"கல்லினோடு என்னைப் பூட்டி அமண் கையர்" – 5-72-7

திருக்கயிலைப் பொய்கையில் மூழ்கி திருவையாறு குளத்தில் எழுந்தருளினார்.
மாதர்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி– 4-3-1

திருவாய்மூரில் இறைவனது ஆடல் காட்சியினைக் கண்டார்
எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு – 5-50-1

திருபைஞ்ஞீலியில் இறைவனால் பொதி சோறு அளிக்கப்பட்டார்
விரும்பும் பொதிசோறும் கொண்டு நாவின் தனிமன்னர்க்கெதிரே– பெ. பு. 1575

திருப்புகலூரில் உழவாரப் பணி செய்த இடங்களிலெல்லாம் இறைவன் பொன்னும் நவமணியும் விளங்கித் தோன்றச் செய்தான்
உழவாரம் நுழைந்த இடம்தான் எங்கும் பொன்னினொடு நவமணிகள் பொதிந்திலங்க அருள் செய்தார் – பெ. பு. 1686



திருநாவுக்கரசர் தம் வாழ்வில் நிகழ்த்தியருளிய திருவருள் நிகழ்ச்சிகள்

பெண்ணாகடத்தில் (பெண்ணாடம், விருத்தாசலம் அருகில்) தம் தோள் மீது சூலக்குறியும், இடபக்குறியும் இடுமாறு இறைவனை வேண்ட, அவ்வாறே இறைவனும் தம் பூத கணங்களை அனுப்பி அவர் தோள் மீது இடுமாறு செய்தான்.
"பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்" – 4-109-1

நல்லூரில் தம் முடி மீது இறைவன் திருவடி சூட்டப்பெற்றார்.
கோவாய் முடுகி அடுதிறற் கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என் மேற் பொறித்துவை – 4-96-1

திங்களூரில் (திருவையாற்றிற்கு அருகில்) அரவம் தீண்டி இறந்த அப்பூதியடிகள் மகனைத் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்தார்
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை – 4-18-1

திருவீழிமிழலையில் இறைவனிடம் வேண்டி படிக்காசு பெற்று மக்கள் பசி தீர்த்தார்
அல்லார் கண்டத்து அண்டர்பிரான் அருளால் பெற்ற படிக்காசு – பெ. பு. 1529

திருமறைக்காட்டில் அடைக்கப்பட்டிருந்த திருக்கதவினைத் திருப்பதிகம் பாடித் திறக்கச் செய்தார்.
பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ – 5-10-1







தேவாரம்,திருவாசகம், பன்னிரு திருமுறைகள் என ஒவ்வொன்றிலும் திளைத்து,பக்தி அமுதை,தமிழ்த் தேனில் பருக வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அதற்கு திருவருள் கூட்டுவிக்க வேண்டும் என்றும் நம்புகின்றோம்.

மீண்டும் அடுத்த பதிவில் மற்ற மூவர் பற்றி அறிவோம்.

முந்தைய பதிவுகளுக்கு :-

அகத்தியர் தேவாரத் திரட்டுhttps://tut-temple.blogspot.in/2017/06/blog-post_65.html


29 July 2017

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017

தானம் என்பது நம்மிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து – கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி அடைவதால் ஏற்படும் – பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல். தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் என்று பொதுவாக மூன்று வகைப்படுத்தப்படுகின்ற தானங்களிலும், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும்,மிக மிக உயர்ந்ததாகவும் உன்னதமானதாகவும் அனைவரும் செய்தே ஆகவேண்டிய தானமாகவும் கருதப்படுவது அன்னதானம் மட்டுமே ஆகும்.

உணவின்றி உயிரில்லை, உலகில்லை
உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும்.

 பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு போன்ற மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால்,அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் அன்னதானம் மட்டுமே ஆகும்.

மனித மனமே எதிலும் முழுமையாக திருப்தியடையாது.மனமானது ஒன்றை பெற்றுவிட்டால் அடுத்ததிற்கு ஏங்கும்.பசித்த ஒருவன் சாப்பிடும்பொழுது மட்டும்தான் வயிறு நிறைந்தவுடன் மனமும் நிறைகிறது.

உலகத்தில் சிறந்த பரிகாரங்களுள் ஒன்று மனித மனத்தை குளிர்விப்பது ஆகும்.ஒருவருக்கு பொன்னாலும்,பணத்திலானாலும் திருப்தி படுத்த முடியாவிட்டாலும் நாம் உணவு அளிக்கும்போது அவர் மனதை திருப்திபடுத்திவிடலாம்.அதனால்தான் அன்னதானம் செய்வது மிகப்பெரிய தர்மம் ஆகும்.

எந்த ஒரு பெரும் வைபவத்திலும் இறுதியாக அமைவது அன்னதானம் மட்டுமே. வைபவத்தில், எந்த ஒரு குறையிருந்தாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் களைவது அன்னதானம் மட்டுமே ஆகும். உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.







அன்னதாதா சுகி பவ (அன்னத்தை வழங்குபவர் சுகமாக வாழ்வார்) – என்ற மூதுரையும்,

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன்
 பெற்றான் பொருள் வைப்புழி (திருக்குறள் – 226)

என்ற திருக்குறளும் அன்னதானத்தின் அருமைகளை அறிவிக்கின்றன. அன்னதானத்தின் பெருமைகளை அளவிடமுடியாது. அதைப்பற்றி அறிவிக்க அனேகம் உள்ளன.

தானம் செய்வதில் பெரும் பெயர் அடைந்தவன் கர்ணன். மஹாபாரத இதிகாசத்தில் கர்ணன், அவன் செய்த கொடையாலும், தர்மத்தாலும், தானத்தாலும் பெரும் பெயர் பெற்றான். கர்ணனுக்குப் பிறகு கொடையில்லை என்ற சொல்வழக்கே உண்டு. கர்ணனைப் போல் யாவரும் தானம் செய்தது கிடையாது. அவன் பெருமையை அனேக சம்பவங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.

ஒரு சமயம், கடும் மழையால் அகிலமே நனைந்திருக்கின்றது. அச்சமயம் பார்த்து வேதியர் ஒருவர் தான் செய்யவேண்டிய ஒரு பெரும் யாகத்திற்காக, காய்ந்த ஸமித்துகளும், மரங்களும் பெற வேண்டி, அனைவரிடமும் வேண்டுகின்றார். சமையலுக்குக் கூட விறகு இல்லாத நிலையில் அனைவரும் தங்களிடம் இல்லை என்று கைவிரித்து விடுகின்றனர். இறுதியாக கர்ணனிடம் வந்து யாசிக்கின்றார்.
அவர் கர்ணனிடமிருந்து பெரும் அளவில் காய்ந்த மரங்களை யாகங்களுக்காக மனமகிழ்வுடன் பெற்றுச் செல்கின்றார். எங்கிருந்து இந்த அளவுக்குக் காய்ந்த மரங்கள் கிடைத்தன என்று அனைவரும் வியந்தனர். அரண்மனையின் உள்ளே சென்று பார்த்தபோது தான் தெரிந்தது, தனது மணிமண்டபத்தினை இடித்து, மண்டபத்தினைத் தாங்கிக் கொண்டிருந்த உத்தரங்களையும், தூண்களையும் (மண்டபத்தின் உள்ளே இருக்கும் தூண்களும், உத்தரங்களும் காய்ந்துதானே இருக்கும்) வெட்டிக் கொடுத்திருக்கின்றான் கர்ணன்.

அந்த அளவுக்கு கொடுப்பதிலே வள்ளல் கர்ணன். வறுமைக்கே வறுமையை வைத்தவன். இடது கை கொடுப்பதை வலது கை அறியாவண்ணம் (இடக்கையில் இருப்பதை வலக்கையில் கொண்டு வரும் நேரம் கூட, தானத்தின் தன்மையை மாற்றிவிடும். ஆகையால், இடக்கையில் எடுத்ததை அக்கையாலேயே வழங்கும் தன்மை கொண்டவன்) கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரத்தை உடையவன்.

கர்ணனின் கொடைக்கு மற்றும் ஓர் உதாரணம். மஹாபாரதப் போரில் கர்ணனின் மார்பை அம்புகளால் துளைத்தெடுக்கின்றான் அர்ஜுனன். ஆயினும் கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த தர்மம் அவனின் தலையைக் காக்கின்றது. பகவான் கிருஷ்ணர் ஒரு வேதியர் வடிவம் கொண்டு கர்ணனிடம், இதுவரை கர்ணன் செய்த புண்ணியத்தை அனைத்தையும் தானமாக வேண்டுகின்றார்.
இதுவரை செய்த தானத்தைக் கொடுப்பதால் அதற்கென்று ஒரு புண்ணியம் வருமே! அந்தப் புண்ணியத்தையும் தானமாக கொடுக்கின்றார் கர்ணன்.எப்படி? வேதியர் வடிவம் கொண்ட கிருஷ்ணருக்கு ‘இப்பிறப்பில் யான் செய்புண்ணியம் அனைத்தையும் தருகின்றேன்’ என்று உரைக்கின்றார்.

செய்புண்ணியம் எனும் வார்த்தை ஒரு வினைத் தொகை. வினைத் தொகை முக்காலத்தையும் குறிக்கக் கூடியது. உதாரணமாக ஒரு வினைத்தொகை வார்த்தை : ஊறுகாய். ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறப்போகின்ற காய் என்று அர்த்தம் அமையும். அது போல செய்புண்ணியம் எனும் வார்த்தை இதுவரை செய்த புண்ணியம், இப்பொழுது செய்கின்ற புண்ணியம், எதிர்வரப் போகின்ற புண்ணியம் என அனைத்தையும் தானமாக கண்ணனுக்கு அளிக்கின்றான் கர்ணன்.

கர்ணனுக்கு அளப்பரிய வகையில் தானம் செய்த பெரும் பெயர் கிடைக்கின்றது. தானம் பெற்றவுடன் வேதியர், தன் சுய உருக்கொண்டு, கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டுகின்றார். கர்ணன் மடிகின்றான். இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே!
தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்ன என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார். கர்ணனிடம் நாரதர் பசி நீங்கவேண்டுமானால் உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது.

மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும் ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார். அதற்கு நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய். ஆனால் ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால் இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது.











உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது.

ஆகையால் உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார். அன்னதானம் செய்யாமலேயே அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால் அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.

கர்ணனுக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது. அன்னதானத்தையும் அளப்பரிய வகையில் செய்யத் தோன்றுகின்றது. பரம்பொருளிடம் தன் எண்ணத்தை முன்வைக்கின்றான் கர்ணன்.கி.பி. எட்டாம் நூற்றாண்டு. மாமல்லபுரத்தைக் கட்டிய நரசிம்ம பல்லவன் காலம். நரசிம்ம பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதி. மகா வீரர்.
பரஞ்சோதி படைக் கலன்களைக் கையாள்வதில் பெரும் தேர்ச்சி பெற்றிருந்தார். அதேசமயம் சிவத் தொண்டிலும், சிவனடியார்க்குத் தொண்டு செய்வதிலும் மனம் அதிகமாகச் சென்றது.

நரசிம்ம பல்லவனுக்காக, வடபுலம் சென்று வாதாபி எனும் நகரைக் கொளுத்தி வெற்றி வாகை சூடி வருகின்றார். பரஞ்சோதி படைத் தளபதியாக இருந்தாலும், ஆழ்மனதில் சிவத்தொண்டு செய்யும் மனப்பாங்கே அதிகமாக இருந்தது. வெற்றிச் செய்தியை நரசிம்ம பல்லவனுக்குச் சொல்லிய அதே நேரம் தன் உள்ளக் கிடக்கையாகிய சிவத்தொண்டு புரிவதே தன் விருப்பம் என்று சொல்கின்றார்.

மனம் மகிழ்ந்த பல்லவன் பரஞ்சோதியின் விருப்பத்திற்கிணங்க, அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்தான். திருவெண்காட்டு நங்கை எனும் தன் மனையாளுடன் இல்லறம் நடத்திவந்தார். சீராளன் எனும் செல்வ மகன் பிறந்தான். மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.சிவனடியார்களில் தான் ஒரு சிறு அடியவர் என அறிவித்துக் கொண்டமையால் அவர் சிறுத்தொண்டர் என அன்புடன் அழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு நாளும் சிவனடியாருக்கு அன்னதானம் இட்ட பிறகே உண்ணும் வழக்கம் கொண்டு, அந்த சிவப் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார். அப்பணியை குடும்பமே உவந்து செய்து வந்தது.

அவரின் சிவத்தொண்டினை உலகறியச் செய்ய சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். ஒரு நாள், வைரவர் (வடதேசத்திலிருந்து வந்த காபாலிகர். சிவச் சின்னங்களோடு, கையில் மண்டையோடு, சூலாயுதம் தரித்து) வேடம் கொண்டு, சிறுத்தொண்டர் இல்லம் சென்றார்.அச்சமயம், சிறுத்தொண்டர் சிவனடியார் எவரேனும் இருக்கின்றாரா என்று பார்த்து அழைத்து வர வெளியில் சென்றிருக்கின்றார்.
வைரவர் வேடம் கொண்ட சிவமூர்த்தியைக் கண்ட சிறுத்தொண்டரின் மனைவி ஆவலுடன் அன்னமிட அழைக்கின்றார். அவரோ, ஆண்கள் இல்லாத வீட்டில் நுழையமாட்டேன், அருகில் (உள்ள ஆலயமாகிய திருச்செங்காட்டங்குடியின் ஸ்தல விருக்ஷமாகிய) அத்தி மரத்தின் கீழ் அமர்கின்றேன், உன் கணவர் வந்தால் வரச்சொல் என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

சிவனடியார் எவரையும் காணாமல் மனம் நொந்து வருகின்ற கணவரைக் கண்டு, அவரின் மனைவி நடந்ததைச் சொல்ல சிறுத்தொண்டரோ மனம் மிக மகிழ்ந்து அத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருந்த வைரவர் கோலம் கொண்ட வடகயிலை நாதனின் பாதத்தில் விழுந்து அன்புடன் அடியவன் இல்லம் வந்து அமுது கொண்டு அருள்பாலிக்க அழைக்கின்றார்.
வைரவரோ, நான் கேட்கும் உணவை உன்னால் அளிக்க முடியாது. ஆகையால் உன் இல்லம் வரமுடியாது என்கின்றார். சிறுத்தொண்டர் தாங்கள் கேட்கும் உணவை மிக நிச்சயமாக அளிப்பேன் என்று வாக்குக் கொடுக்கின்றார்.

அனைவரும் அதிரும் வண்ணம் வைரவர் ‘நான் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் உணவு கொள்வேன். அந்த உணவு ஐந்து வயதுடைய, குடும்பத்திற்கு ஒரே வாரிசான ஆண் குழந்தையின் கறியை மட்டுமே சாப்பிடுவேன். அதுவும் அக்கறியை அக்குழந்தையின் அன்னை கால்களைப் பிடிக்க தந்தை அரிவாளால் அரிந்து சமைக்க வேண்டும். இந்தச் செயலைச் செய்யும் போது எவர் கண்ணிலும் கண்ணீர் வரக்கூடாது. மனமகிழ்வுடன் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் தான் சாப்பிடுவேன்’ என்கின்றார்.
எந்தக் குழந்தையின் தாய் தன் ஒரே மகனை வெட்டுப்படுவதைப் பார்க்க முடியும்? எந்தத் தந்தைதான் தன் ஒரே குழந்தையை வெட்ட முடியும்? அதுவும் அச்செயலை மனமகிழ்வுடன் எவர்தான் செய்ய முடியும்? கலங்கிய நிலையில் வீட்டிற்கு வரும் கணவரை ஆவலுடன் கேட்கின்றார் அவரின் மனைவி. நடந்ததை விவரிக்கின்றார் சிறுத்தொண்டர்.




வேறு எவரிடமும் சென்று உங்கள் குழந்தையை வெட்டிக் கொடுங்கள் என்று கேட்க முடியாதே என்று வருந்துகின்றார்.  இருவரும் சேர்ந்து ஒரு முடிவெடுக்கின்றனர். தமது ஒரே குழந்தையை ஆசையும் பாசமும் சேர்த்து வளர்த்துவரும் செல்வ மகனை ஐந்து வயதுடைய சீராளனையே கறி சமைத்து அன்னமிட முடிவெடுக்கின்றனர்.
பாடசாலை சென்றிருந்த சீராளனை அழைத்து வருகின்றார் சிறுத்தொண்டர். ஏதுமறியாக் குழந்தை ஆசையுடன் தந்தையின் கழுத்தைக் கட்டி முத்தமிடுகின்றது. வீட்டிற்கு வந்தவுடன் குழந்தையைக் குளிப்பாட்டி அழகு செய்து அமரவைக்கின்றார் திருவெண்காட்டு நங்கை. நங்கை கால் பிடிக்க சிறுத்தொண்டர் குழந்தையை அரிவாளால் அரிந்து தர குழந்தைக் கறி செய்கின்றனர்.

இதை அனைத்தையும் முடித்து வைரவரை அழைக்கின்றார். வைரவரும் சிறுத்தொண்டரின் இல்லம் வந்து அன்னமிடச் செல்கின்றார். நங்கை அன்னத்துடன் குழந்தைக் கறியையும் கொண்டு வந்து பரிமாறுகின்றார். அப்போது வைரவர் தன்னுடன் அமர்ந்து சாப்பிட சிறுத்தொண்டரை அழைக்கின்றார்.

வைரவரின் மனம் கோணக் கூடாது என எண்ணி, அவர் அருகே அமர்கின்றார். சிறுத்தொண்டருக்கும் குழந்தைக் கறியுடன் உணவு பரிமாறப்படுகின்றது. தன் மகனின் கறியை தானே சாப்பிடவும் துணிகின்றார். வைரவர் மேற்கொண்டு சிறுத்தொண்டரை நோக்கி உனக்கு மகன் இருக்கின்றான் எனில் அவனையும் அழைத்து வந்து சாப்பிடச் சொல்லுங்கள் என்கின்றார்.

தன் மகனின் கறியைத் தான் சமைத்தோம் என்று சொன்னால் இறந்தவர் வீட்டில் வைரவர் சாப்பிட மாட்டாரோ என்று எண்ணி அஞ்சி, ‘அவன் உதவான்’ என்கின்றார். வைரவரோ, ‘இல்லை இல்லை. அவன் வந்தால் தான் சாப்பிடுவேன்’ என்கின்றார். மனம் கலங்கி நின்ற சிறுத்தொண்டரை நோக்கி, வைரவர், உங்கள் மகனை அழையுங்கள் என்கின்றார்.

நிலைதடுமாறி, வாசலில் நின்று ‘சீராளா’ என்கின்றார். மகன் எப்படி வரமுடியும்? வைரவர் திருவெண்காட்டு நங்கையை நோக்கி, நீங்கள் சென்று அழையுங்கள் என்கின்றார். அவரும் தலைவாசல் வந்து ‘சீராளா’ என்கின்றார்.
அனைவரும் அதிசயக்கும் வகையில், சீராளன் பாடசாலையிலிருந்து வரும் நிலையில், ‘அப்பா, அம்மா’ என்று அழைத்தபடியே வர, பெற்றோர்கள் அவனை அப்படியே வாரியெடுத்து உச்சிமோர்ந்து மகிழ்ந்து உள்ளே வர அங்கே இருந்த உணவையும் வைரவரையும் காணவில்லை. சிவனும் பார்வதியும் இடபாரூடராகக் காட்சி நல்கினார்கள். அனைவரும் நற்கதி பெற்றனர்.

அது சரி ..கர்ணனுக்கும், சிறுத்தொண்டருக்கும் என்ன சம்பந்தம்? என்று தானே கேட்கின்றீர்கள் ?

சொர்க்கத்திலும் பசியெடுத்த கர்ணன் பரம்பொருளிடம், தான் மறுபடியும் பூலோகத்தில் பிறந்து, கொடைக்கு ஒரு கர்ணன் என்று பெயர் எடுத்தது போல அன்னதானத்திலும் தான் ஒரு பெரும் பெயரும் பேறும் பெற வேண்டும் என்று பெரும் தவம் செய்து வேண்டிக்கொண்டான்.
(கர்ணனின் முற்பிறப்பு ஸஹஸ்ர(1000)கவசன் என்றும், நரநாராயணர்களால் 999 கவசங்கள் அறுபட்டு, சூரியனிடம் அடைக்கலம் புகுந்தவன் என்றும், அவனே மறுபிறப்பில் ஒரே ஒரு கவசத்துடன் பிறந்த கர்ணன் என்றும் அபிதான சிந்தாமணி கூறுகின்றது.)
அந்தக் கர்ணனின், மறுபிறப்புதான் சிறுத்தொண்டர்.
 எவரும் செய்யத் துணியாத வகையில் வைரவருக்கு அன்னமிட்டவர். சிவ பதவி அடைந்தவர். 63 நாயன்மார்களுள் ஒருவராகக் கொண்டாடப்படுபவர். அவரின் தூய்மையான பக்தியையும், இறைத் தொண்டினையும், ஆழ்ந்த நம்பிக்கையும், அன்னமிடுதலில் உள்ள அளவிலா அவாவினையும் இன்றளவும் உலகம் மெச்சுகின்றது.

கர்ணன் வேண்டி விரும்பிப் பெற்ற பிறவியே சிறுத்தொண்டர். முழுக்க முழுக்க அன்னதானத்திற்காகவே பிறப்பெடுத்தவர். அன்னதானமிட்டு அளப்பரிய பேறு பெற்றவர். அருந்தவம் செய்ததாலேயே அன்னதானம் செய்ய முடிந்தது.
அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலைக்காக்கும் என்றும், சந்ததிகளை வளமாக வாழவைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னதானம் செய்வதால் எல்லா விதமான பலன்களும், வேண்டுதல்களும் நிறைவேறும்.இனிமேல் அன்னதானம் என்று சொன்னவுடன் மேற்சொன்ன இரு நிகழ்வுகளும் நினைவிற்கு வர வேண்டும்.இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை நாம் நம் தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்தால் தான்,அவர்களுக்கும் பூரண தானத்தின் அருமை புரியும்.


உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, மனிதனோ, பறவையோ, மிருகமோ,புழுபூச்சியோ எது வருகிறதோ அதுவே அதிதி. இவை யாவும் உணவை நாடுகின்றன. உன்னிடம் வரும் உண்மையான அதிதியை, நீ அதிதியாகக் கருதுவதில்லை. காக்கைக்கு உணவு அளிக்கும் சமயத்தில், சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டு போய்  வீட்டுக்கு வெளியே வை. எந்தப் பிராணியையும் கூவி அழைக்காதே. வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே. எந்தப் பிராணி உணவுகொள்ள வந்தாலும் அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாதே. இவ்வாறாக இலட்சம்  விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய்.  "பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

நம் TUT தளத்தின் வாயிலாக அன்னதானம் செய்த நிகழ்வினை அடுத்து காண இருக்கின்றோம். 
TUT குழு வாயிலாக அன்னதானம் செய்ய வேண்டும் என்று கடந்த இரு மாதங்களாக நினைத்துக் கொண்டே வந்தோம்.சற்று பெரிய அளவில் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோவில் அல்லது திருப்போரூர் முருகன் கோவில் என்று சற்று யோசித்துக் கொண்டே இருந்தோம்.நம்முடைய பிரதான சேவையில் உழவாரப்பணியும் அன்னதானமும் இருந்து வருகின்றது.நாம் மட்டும் மனது வைத்தால் முடியுமா? அவர் மனது வைத்தால் தானே நடக்கும்.

சென்ற சனிக்கிழமை அன்று அடுத்த உழவாரபணி நிகழ்வின் சில பணி இருந்தது.அதனை சற்று செய்து முடித்து விட்டு,சனி மாலை கூடுவாஞ்சேரி வந்தோம். காலையில் TUT குழும உறவினர் நம்மைத் தொடர்பு கொண்டு அன்னதானத்திற்கு சிறிய தொகையை வாங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்னார்கள். சனிக்கிழமை பகல் வேலை இருந்ததால் மேற்கொண்டு பார்க்கலாம் என்று நினைத்தோம்.




மாலை 4 மணி அளவில் அலைபேசியில் பணம் வந்ததாய் ஒரு தகவல். அடுத்த நாளும் வெளியே செல்ல வேண்டி இருந்ததால்,அன்று இரவே செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.இரவு 7 மணி முதல் அமாவாசை ஆரம்பம்.எனவே சற்றே காத்திருந்தோம். மணி 7 ஆனது. உடனே அருகிலிருக்கும் ஹோட்டல் சென்று 5 இட்லி கொண்டு ஒரு 15 உணவு பொட்டலங்கள் கட்ட சொன்னோம்.15 தண்ணீர் பாக்கெட் வாங்கி கொடுத்தோம். எனவே ஒரு பொட்டலத்தில் 5 இட்லி மற்றும் 1 தண்ணீர் பாக்கெட் கட்டினோம். நேரே அருகிலிருக்கும் வேலியம்மன் கோவிலுக்கு சென்று, தாயிடம் வேண்டினோம். அர்ச்சகர் ஒரு பாக்கெட் எடுத்து தாயின் பாதத்தில் வைத்து பூஜை செய்தார்.





பூஜை முடிந்ததும், அங்கே இருந்த வளையல் விற்கும் பாட்டியிடம் ஒரு பொட்டலம் தர சொன்னார்.பின்பு அங்கே 4 பொட்டலங்கள் கொடுத்துவிட்டு நகர்ந்தோம். உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை.தலைவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு மீதமுள்ள உணவோடு நடக்க ஆரம்பித்தோம். கை வலிக்க ஆரம்பித்தது. கை மாற்றி,மாற்றி பையைத் தூக்கிக் கொண்டு நடந்தோம்.அப்படியே நடந்து கூடுவாஞ்சேரி வள்ளலார் கோவில் அடைந்தோம். சுமார் 7:20 மணி இருக்கும். அங்கு யாரையும் காணவில்லை. நாம் கொடுக்கும் அன்னம்,சரியான நபர்களுக்கு போய்ச் சேர வேண்டும் என்பது மனதில் இருந்தது.மீண்டும் அங்கிருந்து மெயின் ரோடு வாயிலாக நடந்தோம்.

நன்கு தெரிந்த நபர் மோகன் அவரை தேடினோம்.அவரைக் காணவில்லை.பின்பு அப்படியே ரோட்டைத் தாண்டி நந்தீஸ்வரர் கோவில் நோக்கி நடக்கலானோம். அங்கே செல்லும் வழியில், அழுக்கான உடையோடு ,சில சிறார்கள் இருந்தனர்.அவர்களும் சில உணவு பொட்டலம் கொடுத்தோம்.பின்னு நேரே கோவிலுக்கு சென்றோம். கையில் ஒரு 7 உணவு பொட்டலங்கள் இருந்தது.எப்படியாவது இந்த 7 உணவு பொட்டலங்களை சரியான நபர்களிடம் சேர்க்க வேண்டி சென்றோம்.

கோவிலை ஒட்டிய தெருவில் 2 நபர் இருந்தனர்.அவரிடம் சாப்பாடு வேண்டுமா ? என்று கேட்டோம். அவர் மறுத்து விட்டார்.நாம் மேற்கொண்டு அவரைக் கேட்கவில்லை.நேரே,கோவிலை அடைந்தோம்.அங்கே 4 பேர்,கோவில் வாசலில் இருந்தார்கள்,அவர்களிடம் ஒவ்வொரு உணவு பொட்டலமாக எடுத்துக் கொடுத்தோம். கடைசியில் இருந்த உணவை யாருக்கு கொடுப்பது என்று யோசித்தோம்.பூ விற்கும் நபர்,எனக்குத் தாருங்கள் என்றார். உடனே, மன மகிழ்வோடு கடைசி உணவுப் பொட்டலத்தை கொடுத்து,கோவிலுக்குள் சென்று,அபிஷேக பிரியனை தரிசித்து, மகிழ்வுற்றோம்.




மனதிருப்தியோடு,எங்களால் முடிந்த அளவில் ஆடி அமாவாசை அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.காரணம் இன்றி காரியம் இல்லை என்பது மீண்டும் இங்கே மெய்யானது.ஏனெனில் சொல்லியவாறு பொருளுதவி செய்த TUT உறவின் செயலால் இது நடைபெற்றது.அவர்களுக்கு
நன்றி சொன்னோம்.சரியாக காட்சிப் படங்கள் எடுக்க இயலவில்லை.

ஒருபோதும் அசைவ அன்னதானம் செய்யக் கூடாது;
ஒருபோதும் கட்டாய அன்னதானம் செய்யக் கூடாது; அன்னதான உணவுப்பொட்டலத்தை கோவில் வாசலில் தரும்போது ஏதாவது ஒரு துறவியோ, சாதுவோ எனக்கு வேண்டாம் என்று சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அவரிடம் நீங்கள் வாங்கித் தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவரிடம் உணவுப் பொட்டலத்தைத் திணிக்கக்கூடாது;
வீடு, வாசல் இல்லாமல் வாழ்பவர்களுக்கு இலவசமாக தரும் உணவுக்கே அன்னதானம் என்று பெயர்.

மகன்/மகள்களால் கைவிடப்பட்டு நிராதரவாக வாழ்ந்து வரும் வயதானவர்களுக்கு தரும் இலவச உணவும் அன்னதானக் கணக்கில் வரும்.

ஒருபோதும் அகால அன்னதானம் செய்யக் கூடாது; அதாவது இரவு 9 மணிக்கு மேல் விடிகாலை 5 மணி வரை அன்னதானம் செய்யக் கூடாது; அதனால் பலன்கள் கிட்டாது.

அனாதை இல்லங்களில் செய்யும் அன்னதானத்திற்கும் பலன் உண்டு; அதை விடவும் பழமையான சிவாலயங்கள், நமது ஊரில் இருக்கும் புராதனம் மிக்க சிவாலயங்களில் செய்யப்படும் அன்னதானத்திற்கே தெய்வீக சக்தி அதிகம்!

ஒரே ஒரு துவாதசி திதியன்று அண்ணாமலையில் செய்யப்படும் மூன்று வேளை (காலை, மதியம், இரவு)அன்னதானமானது காசியில் ஒரு நாளுக்கு ஒரு கோடி பேர்கள் வீதம் நமது வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்தமைக்கான பலன்களை விடவும் அதிகமான பலன்களைத் தரக்கூடியது.


ஒரு தமிழ் வருடத்தில் மூன்று முக்கியமான நாட்களில் அன்னதானம் செய்தாலே நமது முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் செய்தமைக்கான பலன்கள் கிடைத்துவிடும்; நமது முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த கர்மவினைகளின் வலிமையை குறைத்துவிடவும் முடியும்.

நமது முன்னோர்கள் கடந்த ஐந்து தலைமுறைகளாக (நமது அம்மா+ அப்பா, நமது தாத்தாக்கள்+ பாட்டிகள், நமது பாட்டனார்கள்+ பாட்டிகள், நமது முப்பாட்டன்கள்+ முப்பாட்டிகள்) செய்த கர்மவினைகளையும் நீக்கிவிட முடியும்.

அதுதான் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை!
இந்த மூன்று அமாவாசை நாட்களிலும் நாம் வாழ்ந்து வரும் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தின் வாசலில் காலை 7 மணிக்குள்ளாகவும், மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும், இரவு 6 மணிக்கு மேல் 7மணிக்குள்ளாகவும் ஒரே ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்ய வேண்டும்.

காலையில் ஐந்து இட்லிகள்+சட்னி+சாம்பார்+நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியை அன்னதானமாகச் செய்வது மிகவும் சிறந்த புண்ணியம் தரும்; இதையே இரவு நேரத்திலும் செய்யலாம்; இரண்டு வேளைகளிலும் செய்யலாம்;
மதிய நேரத்தில் முழு உணவினை அன்னதானமாகச் செய்யலாம்.

விரைவான நிம்மதியையும், தொழிலில் ஸ்திரத் தன்மையையும், வேலையில் பதவி உயர்வையும், குடும்பத்தில் கணவன்+மனைவி; பெற்றோர்+பிள்ளைகள்; ஒற்றுமை பெற விரும்புவோர் தை அமாவாசை வரும் நாளில் பின்வரும் சிவாலயங்களில் ஏதாவது ஓரிடத்தில் அன்னதானம் செய்வது அவசியம்.

அண்ணாமலை,சதுரகிரி,பர்வதமலை,கொல்லிமலை போன்றதலங்களில் அன்னதானம் செய்ய இயலாதவர்கள் அவரவர் வசிக்கும் ஊரில் இருக்கும் சிவாலய வாசலிலேயே அன்னதானம் செய்யலாம்.

நமது மனப்பூர்வமான அன்னதானமே முக்கியம். இந்த அன்னதானம் செய்வதை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது.

நாம் அன்னதானம் செய்வதோடு நமது மனம் நிறைவடைந்துவிடும்; நம்மிடமிருந்து அன்னதானத்தைப் பெற்றவர்கள் அதை தவறாகப் பயன்படுத்
தினால், அது நம்மைக் கட்டுப்படுத்தாது.

TUT உறவுகளுடன் கலந்து,ஆலோசித்ததில்,இனிவரும் மாதங்களில் உள்ள அமாவாசை அன்று இது போல் அன்னதானம் செய்ய குருவருளும்,திருவருளும் கூட்டுவித்துள்ளது என்பதை மகிழ்வோடு இங்கே சொல்லிக் கொள்கின்றோம்.இதன் பொருட்டு அன்பர்கள் பொருளுதவி இல்லையேல் தங்களால் முடிந்த உதவி செய்யலாம் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

வாருங்கள் ஊர்கூடித் தேர் இழுப்போம்.

முந்தைய பதிவிற்கு :-

இன்று - ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்க வேண்டிய பக்திக் கதை -http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_21.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும்http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

எங்களின் ஓராண்டு பயணம்.. http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

28 July 2017

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்!








மேலே உள்ள படத்திற்கான விளக்கம் கீழேயுள்ள வீடியோவை பாருங்கள்.





27 July 2017

விவேகானந்தர் விஜயம்

இன்றைய பதிவில் நாம் விவேகானந்தரின் வருகையைப் பற்றி சில துளிகள் காண இருக்கின்றோம்.இந்த பதிவு காட்சிப் பதிவாகவும் இருக்கும் என்று நம்புகின்றோம்.யானையின் பலம் யானைக்கே தெரியாது என்பர். நாமும் பல நேரங்களில் அவ்வாறே. இந்த உலகம் உய்ய நம் முன்னோர்கள்/சித்தர்கள்/மகான்கள்  பலர்  நம் கற்பனை கூட செய்யாத பல பொக்கிஷங்களை விட்டுச் சென்றுள்ளனர். அது அறியாமல் வாழ்க்கை என்னும் சக்கரத்துடன் இனைந்து நாமும் சுற்றிக் கொண்டுள்ளோம். அப்படிப் பல பொக்கிஷங்களை விவேகானந்தர் நமக்கு அளித்துள்ளார்.

சுவாமி விவேகானந்தர் - ஒரு மகான், இந்திய திருநாட்டின் பெயரை உலகெங்கும் ஓங்கி ஒலிக்க செய்த வள்ளல், இவரை வெறும் துறவி என்று பார்த்தல் அது நம் ஊனக் கண் செய்யும் தவறே. அவர் வாழ்வியலை போதிக்க வந்த ஆசான்.இன்னும் இன்னும் என சொல்லிக் கொண்டே போகலாம்.அவர் ஆன்மிகத்தை மற்றும் போதிக்கவில்லை என்பது அவரது வரலாற்றைப் படித்தால் புரியும்.



அனைவருக்கும் தெரிந்த கதை தான்,இருந்தாலும் மீண்டும் ஒரு முறை இங்கே பகிர்கின்றோம். ஓடிக்கொண்டு இருந்தால் ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.எத்தனை நாள் தான் ஓடிக் கொண்டிருப்போம்.எதிர்த்து நிற்க வேண்டாமா? எதிர்த்து நின்றாள்,துணிவு கிடைக்கும்.துணிவு இருந்தால் மலை போன்ற பிரச்சினையும் தூள் தூளாகும் அன்றோ?

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி…


ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது—
சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.
அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.

மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.
அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.
அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “”நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.



உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.
–சுவாமி விவேகானந்தா ..

சிறிய கதை போல் தோன்றுகிறதா? இது உண்மை சம்பவம்.ஓடுவதை நிறுத்தி எதிர்த்து நிற்க வேண்டும்.இதுவே நம் பண்பாடு,கலாச்சாரம் கற்றுக் கொடுத்தது. தங்களின் பார்வைக்கு விவேகானந்தரின் சில மேற்கோள்களை இங்கே பகிர்கின்றோம்.படித்து விட்டு,தங்களின் கருத்துக்களை சொல்லுங்கள்.



பகுத்தறிவுவாதி பற்றி விவேகானந்தர் சொல்வதைப் பார்த்தீர்களா? ஒவ்வொரு வார்த்தையும் நறுக்குத் தெறித்தார் போல் உள்ளதா?


உண்மையான நாகரிகம் நம்மிடம் உள்ளதா?என்று கேட்டுப் பாருங்கள்.தன்னை அறிதலே உண்மையான நாகரிகம்.இதை விட எளிதாக யாரவது சொல்லி இருக்கின்றார்களா?



ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற புத்தர் வழியை மேலே காணலாம்.மேற்கொண்டு நீங்களே காணுங்கள்.ஒவ்வொரு காட்சிப்படமும் காணக் கிடைக்காதது.அறிய முத்துக்கள் அள்ளி வீசி சென்றுள்ளார் விவேகானந்தர்.




























மெய் அன்பர்களே. படித்து விட்டீர்களா? ஒவ்வொன்றும் பொக்கிஷம் தானே. நமக்கு கிடைத்த மாபெரும் புதையல்கள் இவை தானே? இதையெல்லாம் படித்த பிறகு,விவேகானந்தரைப் படிக்க வேண்டும் என்று மனம் ஏங்குகின்றது.இங்கே நாம் சில துளிகளை மட்டும் எடுத்து பருகி உள்ளோம்.அவரின் கருத்துக்கள் பெருங்கடல் போன்றது.அவரைப் போல் ஒரு மகானை இனி வரும் காலங்களில் காண இயலாது.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

26 July 2017

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1)

நாம் ஏற்கனவே பதிவிட்ட வாழ்வாங்கு வாழ என்ற ஒரு தொடர்பதிவு பற்றி அனைவரும் அறிவீர்கள்.அதன் தொடர்ச்சியாய் இந்த பதிவு.

எங்கிருந்து ஆரம்பிக்கலாம்? என்ன கேள்வியில் ஆரம்பிக்கலாம் என்று தேடிய பொழுது.கிடைத்தது ஒரு அருமையான கேள்வி.பக்தி,யோகம்,தியானம்,பூஜை என இருந்த போதும்,இந்த கேள்வி அனைவருக்கும் பொதுவானது. சரி அன்பர்களே. கேள்வியை தொடர்வோம்.

நண்பர் - ஆசைகளுக்கோர் அளவில்லை. ஆசைகளை அனுபவித்துக் கடந்து விட ஆயுளும் போதவில்லை. நான் என் செய்வது ? 


 இராம் மனோகர் - முனைப்பாக கவிதை எழுதலாம். மனம் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்காமல், அதை ஆராய முற்படும் பொழுது, சொல் வசப்பட்டு, ஒரு நிலைப்பட்டு, ஆசைகளைக் கடந்து விடும். பொதுவாக எவரிடத்தில் குறைபாடு உள்ளதோ அவரிடத்தில் ஆசைகளும் இருக்கும். குறைபாட்டை நிறைநிலையாக மாற்றியமைக்க வேண்டும் என்கிற எண்ணமே ஆசையே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆசை இல்லாதவர் யார்தான் இருக்கிறார்கள் ? கடவுளுக்குக் கூட ஆசை இருப்பது போல இங்குள்ள ஆன்மிக வியாபாரிகள் காட்டிக் கொள்கிறார்கள். கடவுள் விரும்புகிறார், நீங்கள் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்கிறார்கள். நாம் செய்யும் செயல்களைக் குறித்து கடவுள் கோபப்படுகிறார் என்றோ, சந்தோசமடைகிறார் என்றோ சொல்கிறார்கள். பரிபூரண நிலைக்கு ஏது ஆசை ? ஏது கோபம் ? கடவுளுக்கு ஆசை இருந்தால் அவர் கடவுளே அல்லர். ஆசை இருந்தால் அவர் குறைபாடு உள்ளவராகி விடுவார். பிறகு எப்படி அவரை பரிபூரணனே என்று அழைப்பது ? எனவே கடவுளுக்கு ஆசை இல்லை. இதெல்லாம் ஆசை வயப்பட்டவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி மற்றவர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அன்றி வேறொன்றுமில்லை.


பரிபூரண நிலையில் உள்ள ஒருவர் எதற்கும் ஆசைப்படமாட்டார். ஆசையிலிருந்து விடுபட்ட அவரையே ஜீவன் முக்தன் என்கிறார்கள். எனவேதான் நம் முன்னோர்கள் ''ஈசனோடாயினும் ஆசை ஒழிமின். நிராசை என்னும் தெய்வப் பெற்றியில் நிலை பெற்றிருமின்'' என்றார்கள். நீங்கள் எதை வேண்டுமானாலும் வணங்கலாம் குற்றமில்லை. ஏனென்றால் கடவுள் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். ஆனால், உங்களுக்கும், அந்தப் பொருளுக்கும், கடவுளுக்கும் இடையிலான தொடர்பை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நீங்கள் புரிதலோடு இருந்தால், அந்த முக்கோணத்திற்குள் வேறொருவர் நுழைவது சாத்தியமில்லை. எனவே தன்னிடத்தில் இல்லாத ஒன்றை அடைய வேண்டும் என்கிற எண்ணமே ஆசை என்று சொல்லப்படுகிறது. நிறைநிலை ஞானிக்கோ ஒரு குறைவுமில்லை. எனவே ஆசையுமில்லை.





ஆனால், இவர்களுக்கிடையே எந்த வித உணர்ச்சியுமில்லாத மண்ணாங்கட்டி போன்ற சிலர் இருப்பார்கள். அவர்களுக்கும் ஒரு ஆசையுமிருக்காது. எனவே அவர்களையும் ஞானிகள் என்று எண்ணி சிலர் ஏமாந்து போகிறார்கள். என் நண்பர் ஒருவர் சடை விழுந்த பிச்சைக்காரர்கள், பைத்தியக்காரர்களைப் பார்த்தால் போதும், அவர்களுக்கு அன்று வேட்டைதான். அவர் கையிலுள்ள பணம் முழுவதையும் செலவு செய்திடுவார். நாம் கடிந்து கொண்டால் அவர் ''இப்படி ஆயிரம் பேருக்குச் செய்து வரும் போது அதில் ஒரு சித்தர் வந்து விட மாட்டாரா ?'' என்பார. அவர் மனைவி குழந்தைகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். கிழிந்த உடையும், பசியால் வாடிய முகமாகக் காட்சியளிப்பார்கள். இது கூட ஒருவகையான தேவையற்ற ஆசைதான். சித்தர்களைப் பார்க்க வேண்டும், அவர்களுக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும் என்று எண்ணுவதை விட, அவர்கள் காட்டிய வழியில் செல்வதுதான் சிறந்தது. அதைத்தான் சித்தர்களும் விரும்புவார்கள்.



இந்த ஆசை பற்றி பதஞ்சலி மகான் சொல்கிறார், நமது சம்ஸ்காரங்கள் இரு வகைப்படும். ஒன்று கர்ம பீஜம் மற்றொன்று வாசனை. இந்த கர்ம பீஜமே ஆசைகளைத் தூண்டுகிறது. வாசனையோ நினைவுகளை எழுப்புகிறது என்கிறார். ஒவ்வொரு செயலும் மனதில் ஒவ்வொரு சம்ஸ்காரத்தை உண்டாக்கி விடுகிறது. இதுவே கர்ம பீஜம். இந்த சம்ஸ்காரம் மீண்டும் மீண்டும் எழும் போதும் அதே செயலைச் செய்யும் படிக்கு நாம் தூண்டப்படுகிறோம். இந்தத் தூண்டுதலே ஆசை, உந்து வேகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. நாம் பிறந்தது முதல் இறுதி வரை கோடிக் கணக்கான செயல்களைச் செய்கிறோம். எனவே நம் மனம் அத்தனை கர்ம பீஜங்களையும் கொண்டுள்ள ஒரு சேமிப்புக் கிடங்காக இருக்கிறது. இந்த கர்மபீஜங்களின் மொத்த தொகுதியே கர்மாசயம் எனப்படுகிறது. இந்த கர்மாசயமே மறு பிறவி மற்றும் அதற்கேற்ற உடல், ஆயுள் அனுபவங்களைத் தீர்மானிக்கிறது என்கிறார்.

அதுபோல ஒவ்வொரு செயலும் நமக்கு ஒவ்வொரு அனுபவத்தை தருகின்றது. அந்த அனுபவமும் ஒரு சம்ஸ்காரத்தை விட்டுச் செல்கிறது. இந்த அனுபவத்தின் விளைவால் ஏற்படும் சம்ஸ்காரமே வாசனை எனப்படும். மலரை கூந்தலில் சூடிக் கொள்கிறார்கள். மலர் வாடிப் போன பிறகு அதை எடுத்து களைந்தும் விடுகிறார்கள். எனினும் அதன் நறுமணம் மட்டும் கூந்தலில் இருந்து கொண்டே இருக்கிறதல்லவா ? அது போல இன்ப துன்ப அனுபவங்கள் மனதில் வாசனையை விட்டுச் செல்கின்றன. இந்த வாசனை வரும் போதெல்லாம் அந்த அனுபவத்தைப் பற்றிய நினைவும் எழுகிறது. செயலும் அனுபவமும் பிரிக்க முடியாதவை. எனவே கர்மாசயமும் வாசனையும் இணைந்தேதான் செயல்படும். ஒன்று தூண்டப்பட்டால் மற்றதும் தூண்டப்படும். வாசனை தூண்டப்பட்டால் அது நினைவை எழுப்புகிறது. நினைவு கர்மாசயத்தைத் தூண்டுகிறது. கர்மாசயம் ஆசைகளைத் தூண்டுகிறது.



நாம் செயல்படுகிறோம், அனுபவங்களை அடைகிறோம், அனுபவங்கள் வாசனையை உண்டாக்குகின்றன. இப்படி செயலும், அனுபவமும், கர்மாசயமும், வாசனையும் முடிவின்றி சுழலும் ஒரு சுழற்சி இயக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த சுழற்சி வட்டத்தை, ஆசை வியூகத்தை உடைத்தெறிவதே ஆன்மிக வாழ்வில் தலையாய கடமையாக இருக்கிறது. ஆசைக்கு உட்பட்டவன் குறைபாடு உள்ளவன் நிறை நிலையை அடைய முடியாது. அவனையே ஜீவன் என்றும், பசு என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆசையில் உழலும் ஆத்மா பந்தப்பட்டது. பற்று எனும் பாசத்தால்(கயிறு) கட்டப்பட்டது. பற்று எனும் கயிறை அறுத்தெறிந்து விட்டு, ஆசைகளைக் கடந்து அப்பால் சென்று விட்ட ஆத்மா மட்டுமே நிராசையில் நிலை பெற்றிருக்கிறது. ஆசையைக் கடந்த அந்த நிலையே முக்தி. அது அடைந்துள்ள குறைபாடுகளற்ற பரிபூரணத்தின் இடமே கடவுளின் சன்னிதி.

என்ன அன்பர்களே.தற்போது ஆசை பற்றி அறிந்திருப்போம் என்று நினைக்கின்றோம். வார்த்தைகள் சற்று கடினமாக இருக்கும். இரண்டு,மூன்று முறை படியுங்கள்.தங்களுக்கே விளக்கம் புரியும்.இந்த ஒரு கேள்வியில் பற்பல பதில்கள்,முடிவில் கடவுளின் குணங்கள் பற்றியும் தெரிந்து கொண்டோம்.

-  மற்றொரு கேள்வியில் சிந்திப்போம்.

முந்தைய பதிவிற்கு:-

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர்http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html


25 July 2017

மார்க்கண்டேயனால் உருவான திருக்கழுகுன்றம் சங்கு தீர்த்தம்




தவமாய் தவமிருந்து மிருகண்டு முனிவரும், மருத்துவதியும் நீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாததால் ஈசனை நோக்கித் தவம் செய்தனர். நீண்ட ஆயுளும் சொற்ப அறிவும் உடைய மகன் அல்லது நிறைந்த ஞானமும் குறைந்த வாழ்நாளும் உடைய மகன் இவர்களில் எவர் வேண்டும் என ஈசன் கேட்டார். அவர்களோ நிறை ஞானம் உள்ள மகன் வேண்டுமென கேட்டனர்.


















பதினாறு வயது மட்டும் ஆயுள் உள்ள மார்க்கண்டேயர் மகனாகப் பிறந்து சிவபக்தி சிந்தையில் கொண்டு வளர்ந்து வந்தார். பதினாறு ஆண்டுகள் பூர்த்தியாகும் நேரம்!
தர்மப்படி உயிரை எடுக்க வந்த எமதூதர்கள், மார்க்கண்டேயன் சிவ பூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அஞ்சினர்.


எமகிங்கரர்கள் உயிர் பறிக்க வந்திருப்பதைக் கண்டு கவலை மேலிட சிவலிங்கத்தை இருகரங்களாலும் இறுக்கிக் கொண்டு சிவ நாமத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அதன்பின்னர், தர்மராஜனே எருமைக்கடா மீது ஊர்ந்து வந்தார். மார்க்கண்டேயர் சிவலிங்கத்தை கட்டி அணைத்திருப்பதைக் கண்டு பாசக் கயிற்றினை வீசினார். பாசக் கயிறோ மார்க்கண்டேயனுடன் சிவலிங்கத்தையும் சேர்த்து வளைத்து இழுத்தது.


அப்போது, இறைவன் ருத்ர மூர்த்தியாய் சிவலிங்கத்திலிருந்து வெளித்தோன்றி காலனை காலால் எட்டி உதைத்தார். மூர்ச்சையாகி கீழே சாய்ந்தார் எமதர்மன்.


பின்னர் பூமாதேவியின் வேண்டுகோளின்படி எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளிய வைத்தார். பதினாறு வயதுடன் சிரஞ்சீவியாக வாழ மார்க்கண்டேயனுக்கு அம்பலத்தரசர் அருளினார்.


மார்க்கண்டேயன், ஒவ்வொரு தலமாகச் சென்றபோது, வேதங்கள் வணங்கிய திருக்கழுகுன்றத்தில் வீற்றிருக்கும் வேதகிரீஸ்வரரை வணங்க விரும்பினார்.


திருக்கழுக்குன்றத்திற்கு மார்க்கண்டேயன் வந்த நேரம் குருபகவான் கன்னி ராசியில் பிரவேசிக்கும் காலமாக இருந்தது. அங்கு உள்ள குளத்தில் நீராடி, சிவபூஜை செய்யும் முன் விநாயகரை பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் எடுக்க அவரிடம் பாத்திரம் ஏதும் இல்லை. ஈசனைத் தொடர்ந்து துதித்தார்.


சாதாரணமாக, சங்கு உவர் நீரில்தான் பிறக்கும் ஆனால் சிவனருளினால் அன்றைக்கு அந்த நன்னீர் குளத்தில் ஒரு சங்கு உருவாகி வெளி வந்தது.


இறைவனால் தரப்பட்ட அந்த சங்கை பெற்று அதை கொண்டு சிவனுக்கு அபிசேகம் செய்தார். மாலையில் தீபமிட்டு வணங்கினார். இறைவனுக்காக சங்கு உருவானதால் அக்குளத்திற்கு "சங்கு தீர்த்தம்' என்று பெயர் உண்டானது. அகண்ட இந்த பாரத தேசத்தில் புகழ்பெற்ற இந்த சங்கு தீர்த்த புஷ்கர மேளா நாளில் லட்சதீபம் ஏற்றி வழிபட குருபலம் பெருகும்.


அனகை, அம்பை, இந்திரபுத்ரா, ருத்ரா, கங்கை, காளிந்தி, கவுதமை, கம்பை, காவேரி, சிங்கை சிந்து சோமம், சோவதி , தாமிரபரணி, துங்கபத்திரா ,தென்குமரி, தேவிகை, நர்மதை, நந்தினி, பம்பை. பாலி பிராமி, பினாகி, மலப்பிரதாரினி, மந்தாத்ரி, மணிமுத்து, யமுனை. வேத்தராவதி, கைதாரிணி, வைகை முதலிய நதிகளுக்குள் தாங்களே உயர்ந்தவர்கள் என அவர்களுக்குள் கடுஞ்சண்டை தோன்றியது. அந்த நதிகளுக்குள் சமாதானம் ஏற்படாத நிலையில் குரு கன்னிகாராசியில் பிரவேசம் ஆகும் தினத்தில் அனைத்து நதிகளும் சங்கு தீர்த்தத்தில் சென்று வேதகிரீஸ்வரரை வணங்கி தங்களில் உயர்ந்தவர் யார் என்பதை முடிவு செய்து கொள்ள தீர்மானித்தன.


அனைத்து நதிகளும் அன்றைய தினத்தில் அவரவர் துணைவருடன் வந்து திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை வணங்கி நின்றன. அன்று முதல் அனைத்து நதிகளும் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற கருத்தை விட்டு, பாவம் ஒழிந்து ஜீவநதி என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டு பலன் பெற்றன.


மனக் கஷ்டம் நீங்க..மயிலாண்டவர் திருக்கோவிலுக்கு வாங்க !

திருஒற்றியூர் !

ஆன்மிக பூமி.பற்பல அற்புதங்கள் நிகழ்ந்து வரும் அருள் நிறைந்த ஊர்.திருஒற்றியூர் என்றாலே வடிவுடையம்மன் ஆலயமும்,பட்டினத்தாரும்,வள்ளலாரும் நினைவிற்கு வருவார்கள்.இந்த புனித தலத்தில் நம் பாதம் பட இறை அருள் வேண்டும். ஒட்டுமொத்த ஆன்மிக சங்கம் இங்கே கிடைக்கின்றது.ஒன்றா..இரண்டா ? என அடுக்கும் அளவிற்கு சித்தர்களின் அருள்மழையில் நனைய முடிகின்றது.

வடிவுடையம்மன் கோவில் தரிசனம் பெற நமக்கு ஒரு நாள் தேவை. அந்த அளவிற்கு நாம் தரிசனம் செய்ய வேண்டும்.இங்கே 2 ன் சிறப்பு உள்ளது. இறைவன்,இறைவி,தல மரம்,தீர்த்தம் என இரண்டு இரண்டாய் உண்டு. எல்லாம் இரண்டு: திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும். இங்குள்ள ஈசன் மாணிக்க தியாகர் என்று அழைக்கப்படுகின்றார். 27 நட்சத்திர லிங்கங்கள் இங்கே காணலாம். திரிபுர சுந்தரியான அம்பாளைப் போற்றி ஸ்ரீவடிவுடை மாணிக்கமாலை என்ற போற்றிப்பாடல்களை இயற்றிய பிறகு வடிவுடை அம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி, திருவொற்றியூர் டோல் கேட் ரோட்டில் உள்ள பரஞ்சோதி மகான் தர்கா,சங்கர மடத்துறவி மகா தேவேந்திரர் அதிஷ்டானம்,அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குபேரனால் வழிபடப்பட்ட கோவில்,தக்ஷிணாமூர்த்தி கோவில்,எண்ணூரில் பன்னண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு முத்தாரம்மன், சுயம்பு சித்தர்,பாடகச்சேரி பைரவ சுவாமிகள் அப்புடு சுவாமிகள்,ரோமச மகரிஷி சுயம்பு உருவம்,காக புஜண்டர் ஜீவசமாதி,பட்டினத்தார் சுவாமிகள் ஜீவசமாதி,வீரராகவ சித்தர் ஜீவசமாதி, குணங்குடி மஸ்தான் தர்கா என அருள் நிறைந்த ஊரே திருஒற்றியூர். காண கிடைக்க வேண்டுகின்றேன் திருஒற்றியூர் தரிசனம் !!!

திருஒற்றியூர் பற்றி பட்டினத்தார் சொல்வதைப் பாருங்களேன்.




இத்தகு சிறப்புமிக்க திருஒற்றியூர் தான் மயிலாண்டவர் திருக்கோவிலைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இது போன்ற கோவில் இருப்பதை யாரும் அறிய மாட்டார்கள். நம்முடைய கடமை இது போன்ற சித்தர் பீடங்கள்,பழந் திருக்கோவில்கள் இவற்றை எல்லாம் அனைவரும் அறியும் வண்ணம் மிளிரச் செய்வதே.இது பற்றி பிருகு முனிவரின் வாக்கை காண்போம்.



ஆதியாம் பராபரத்தின் பாதம் போற்றி
அறிவிபேன் பிருகுயான் சீவ சாட்சி
ஒதிடுவேன் குருநாளில் முனிகள் சூழ்ந்த
ஒப்பில்லா சீவதலம் அறிந்து கொண்டு

Praying the Primordial Divine’s feet,
Will declare today, myself, Brighu, as witness,
On this Thursday, with Many Rishis and Munis surrounded,
An un-equalled, live piece of earth !!

கொண்டதொரு ஈசனார்க்கு பரிவாரங்கள்
குருமுனிக்கு சீடனாய் நின்ற சித்து
கொண்டதொரு சீவ மூர்த்தம் லிங்கமாக
குறிப்பான ஆகமங்கள் கடந்து ஞானம்

As a Parivara deity for Lord Shiva, (Lord Adhipureeswara)
is Agasthya’s disciple, and a Siddha,
as a Jeeva Samadhi / Peedam in Linga,
In state of bliss (Gnanam), after crossing Agamas!!

ஞானமுடன் வாசிக்கு உகந்த தடமே
ஞாலமதில் குருமுனிக்கு உகந்த சீடர்
ஊனமிலா மூலன் அம்சம் புசண்டன் அம்சம்
உயர்வான மூலம் சதயம் பூசை நன்மை

Temple is suitable for Pranayama.
In this world, Agasthya’s favourite Disciple,
With teachings of Thirumoolar and Kaga Bujandar.
Poojas on Moolam and Sadhayam stars are good!!

நன்மை பட அகத்தீசன் வழியும் வந்த
நல்லதொரு மார்கங்கள் கொண்டோர் யாவும்
உன்னதமாய் தலம் தேடி ஞானம் கொண்டு
உயர்வடைய செய்வாரே தன் விழிப்பு

Those who follow Agastheesan’s path, (Mahaguru Agasthyar)
and All who come in Paths of Goodness,
Will search this sthalam, come here and get Gnanam,
Siddha will elevate him with self-consiousness!!

விழிப்பு நிலை சகசர யோகம் சித்து இப்போ
வாக்குரைபோம் மாந்தர்க்கும் அறியும் வண்ணம்
வழக்கில்லா நிலை ஜெயமும் உந்தனுக்கு
வழி அளிக்க வல்ல சித்து சீவம் முற்றே !!!


Self-consiousness and Sahasra yoga will be blessed.
Shall declare now, that humans understand,
Rid of problems, with thy victory,
Will this Siddha bless you !!!


கோவிலைப் பற்றி பார்க்கும் முன்பு, உரோம மகரிஷி பற்றி சிறிது காண்போம்.பதிவின் இறுதியில் முக்கியமான அறிவிப்பு இணைத்துள்ளோம்.காரணமின்றி காரியமில்லை என்பது தெளிவாய் உணர்த்தப்படுகின்றது.

எத்துணையோ மகான்களும் ரிஷிகளும் வந்துபோன பூமியிது .உரோமச மகரிஷி :உரோம ரிஷி 


உரோம ரிஷி சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.

இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.

அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார். அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது.

உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார். இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது.
அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார். அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.
உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும்,

அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும்,

கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம்.
உரோமபுரியிலிருந்து ஞானத்தை நாடி தென் தமிழ்நாட்டிற்கு வந்தார் எனவே உரோம ரிஷி என்றொரு கருத்தும், இல்லை, இவரின் உடலில் ரோமம் அதிகம் இருந்த காரணத்தால் உரோம முனி என பெயர் பெற்றிருக்கிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது. 





ஆனால் அவரோ

தன்னைப்பற்றி...
"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "
பால்: : யோக நிலையில் இருக்கும் போது நாம் சிரசில் ஒழுகும் அமிழ்தம் .
ஞால : பரிசுத்த மெய்ஞஞானம்
பதம் : பாதம் இந்தப் பாடல் அவரது உரோம ரிஷி ஞானம் நூலில் இருந்து...
இந்த ஞானவானின் ஞானத்தை அவரின் பாடல்களே நமக்கு காட்டி தருகின்றன.
இதோ ஒரு பாடல்...

தியானத்தைப் பற்றி...
செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே.

போலிகளைப் பற்றி....
மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே.

தவநிலையைப் பற்றி...
சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே
என உரோம ரிஷி ஞானம் கூறுகிறது.

"காடேரி மலையேறி நதிகளாடி
காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே "
சித்தர்களாக,ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலரே எனவும் உரோம ரிஷி ஞானம் சொல்கிறது.
இவர் சிங்கி வைப்பு,
உரோம ரிஷி வைத்திய சூத்திரம்,
வகார சூதிரம்,
உரோம ரிஷி முப்பு சூத்திரம்
போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
நல்லோர் தாள் போற்றி!
நாயகன் தாள் போற்றி !! 


தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷிஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும். இவ்வாறு மூன்றரைக் கோடி பிரம்மாக்கள் இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும். ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார். ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்று விடவே அந்த தாடியை உடவே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த உரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதைக் கண்ட சித்தர் கோவில் வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோவிலின் வெளியிலேயே இறைவன் தரிசனம் தந்ததாக கூறுவர். உரோமமுனி அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.இவர் செம்படவ தந்தைக்கும், குறத்தாய்க்கும் பிறந்ததாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இவர் புசுண்ட முனிவரின் சீடராவார். போகர் சீனதேசத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுபோல, இவர் உரோமாபுரியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் இதனால் உரோம ரிஷி என்று அழைக்கப் பட்டார். இவர் கும்பகோணதிட்கு அருகிலுள்ள கூந்தலூர் என்னுமிடத்தில் தங்கியிருந்த பொது தாடி வழியாக பொன் வரவழைத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது. 

"உரோம ரிஷி ஞானம் " என்ற பெயரில் இவர் எழுதிய நூலில் மொத்தமாக பதின்மூன்று பாடல்களே இடம் பெற்றிருக்கின்றன.
வகார சூதிரம்
உரோம ரிஷி வைத்தியம் 1000
உரோம ரிஷி பூஜா விதி
உரோமரிஷி
பஞ்சபட்சி சாத்திரம்
ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது. 


உரோமமுனி இயற்றிய நூல்கள்
1. உரோமமுனி வைத்தியம் - 1000
2. உரோமமுனி சூத்திரம் - 1000
3. உரோமமுனி ஞானம் - 50
4. உரோமமுனி பெருநூல் - 500
5. உரோமமுனி குறுநூல் - 50
6. உரோமமுனி காவியம் - 500
7. உரோமமுனி மூப்பு சூத்திரம் – 30
8. உரோமமுனி இரண்டடி - 500
9. உரோமமுனி சோதிட விளக்கம்
10. நாகாரூடம்
11. பகார சூத்திரம்
12. சிங்கி வைப்பு
13. உரோமமுனி வைத்திய சூத்திரம் ஆகியன. 


உரோமமுனி தியான செய்யுள்
கனிந்த இதயம், மெலிந்த உருவம்,
சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ?
அலையும் மனதை அடக்கி அருள் அள்ளியே
தருவாய் தாடியில் தங்கம் தந்த தெய்வமே
தங்கள் திருவடி சரணம். 



மகத்துவமான, விசேஷமான ரோமசமகரிஷி என்கிற மிகுந்த மகத்துவம் வாய்ந்த மாமுனிவர் தனது சக்தியின் ஒரு பகுதியை இந்த தர்மம் மிகு சென்னையில் சேமித்து வைத்துள்ளார்.


இந்திரன், பிரும்மா என அனைத்துமே தேவலோகத்தில் இருக்கும் பதவிகள். இந்த பூமியில் பிறந்து மிக அதிகமான புண்ணியம் செய்த ஆற்றல் மிக்க ஆத்மாக்களே இந்திரனாக,பிரும்மாவாக மாறுவார்கள் என்று நமது வேதாகமங்கள் சொல்கின்றன.

நமது அனைவரின் ஆயுளையும் தீர்மானிக்கும். பிரும்மாவின் ஆயுள் 7 கோடியே 20 லக்ஷம்.

ரோம பெயர் காரணம்- ரோமம் என்றால் முடி. கரடியின் உடலில் உள்ள முடியை விட இவர் உடலில் அதிகமாக முடி இருக்கும் என்று மகா பாரதம் போன்ற நூல்கள் சொல்கின்றன.

ரோம மகரிஷியின் மகத்துவம்

ஒரு பிரும்மாவின் ஆயுள் முடிந்ததும். அதாவது 7 கோடியே 20 லக்ஷம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ரோமச மகரிஷி உடலில் இருந்து ஒரு முடி கீழே உதிருமாம்.

ரோமச மகரிஷி அவராகவே தனது உடலில் இருந்து ஒரு முடியை கிள்ளி எறிந்தால்? அடுத்த நொடியே பிரும்மாவின் ஆயுள் முடிந்தது.

இத்தகைய பேராற்றல் மிகுந்த ரோமச மகரிஷியின் கோவில் திருவொற்றியூரில் இருக்கிறது.

திருவொற்றியூரில் உள்ள எல்லையம்மன் கோவில் தெருவில் ரோமச மகரிஷி அருள் பாலிக்கிறார்.

மிக முக்கியமான ஒரு விஷயம். இங்கே ரோமச மகரிஷி ஜீவசமாதி அடையவில்லை.

பலகோடி பிரும்மாக்களின் ஆயுளை தனது உடலில் உள்ள முடிகளில் சுமந்து கொண்டிருக்கும் இவர் ஜீவசமாதி அடைய வேண்டிய அவசியம் இல்லை. சிவபெருமான் பல ஸ்தலங்களில் சுயம்புவாக தோன்றியதை போல் ரோமச மகரிஷி இந்த திருவொற்றியூரில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக தோன்றினார். 





நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் இந்த திரு உருவம் ரோமச மகரிஷியின் சுயம்பு திரு உருவம்.

இந்த ரோமச மகரிஷியை அகஸ்திய முனிவர் வழிபட்டு இருக்கிறார்.

ராமபிரான் வழிபட்டு இருக்கிறார்.

பல இடங்களில் ஜீவசமாதி அடைந்த காகபுஜண்ட மகரிஷி ரோமச மகரிஷியை இங்கே வழிபட்டு அதே இடத்தில் ஜீவசமாதியும் அடைந்து இருக்கிறார். மானுட ஆத்மா போல் மகான்களின் ஆத்மா ஒரே இடத்தில் முடங்கி கிடக்காது.

திருவொற்றியூரில் உள்ள சில நாஸ்திக, வேறு மதத்தை சேர்ந்த சில மாபாவிகள் ரோமச மகரிஷி கோவிலையும், கோவிலுக்கு சொந்தமான இடத்தையும் கொள்ளையடிக்க பல முயற்சி செய்தனர்.

அந்த தீய சக்திகளை ரோமச மகரிஷி தூள், தூள் ஆக்கினார்.

அப்பொழுது பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தது.

இதெல்லாம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தான்.


என்ன அன்பர்களே..படிக்க படிக்க புல்லரிக்கின்றதா? இது தான் சித்தர்களின் அருள்.அவர்களின் அருளை ஒரு பதிவில் அடக்க முடியுமா? முடியவே முடியாது.இனி இந்த திருக்கோவில் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்த மயிலாண்டவர் கோவிலில் அம்பாள் சன்னதி இல்லை. சிவபெருமான் மட்டும் உள்ளார். இந்த சிவா லிங்கமே காக புசுண்டர் ஜீவ சமாதி என்று சொல்லப் படுகின்றது.ரோமச மகரிஷி பஞ்ச பட்சி சாத்திரத்தை எழுதினார். அதில் "மயில் " வெகுவாக குறிப்பிடத்தக்கது.எனவே தான் இந்தக் கோவிலுக்கு மயிலாண்டவர் என்ற பெயர் ஏற்பட்டது.





இந்த கோவில் பார்ப்பதற்கு மாடம் போல் உள்ளது. அதாவது மாட வடிவில் கோவில் உள்ளது.இந்த மாட கோவிலுனுள் ரோமச மகரிஷி அருள் பாலிக்கின்றார்.சொல்லில் வடிக்க இயலாத நிலையில் ரோமச மகரிஷி  தவ நிலையில் இருக்கின்றார்.சற்று ஏறக்குறைய 3-4 ஆதி உயரத்தில் உள்ளார்.வெகு நீண்ட ஜடாமுடியுடன் உள்ளார்.ஜடாமுடியை நன்கு உற்று பார்த்தால் சிவ லிங்கங்களை பார்க்க முடிகின்றது. மொத்தத்தில் ஜடா முடியில் இரண்டு சிவலிங்கங்களை பொதிந்து வைத்துள்ளார்.

தாடியும் அழகாய்,டிரிம் செய்து காட்சி அளிக்கின்றார்.கழுத்தில் ஒரு உருத்திராக்க மாலை அணிந்து உள்ளார்.வலது கையில் வரத முத்திரையிலும்,இடக் கையில் ஒரு சொம்பும்,கரண்டியும் கொண்டு காட்சி தருகின்றார்.இது நோய்களை தீர்க்க அருள் தரும் நிலையன்றோ? வரத முத்திரையில் எங்களின் பயம் நீக்கவும், இடக்கையில் நோய்,நொடி நீக்கும் வல்லமை கொண்ட முனி நீர் தானே !

அத்தி மரம் இந்த திருத்தலத்தின் தல விருட்சமாக உள்ளது. இந்த கோவிலினுள் உள்ள கோசாலை தங்களின் பார்வைக்கு.





கோவிலை சுற்றியுள்ள வண்ணப் படங்கள் அழகோ அழகு.கண்ணை மட்டும் கவர வில்லை. நம் கருத்தையும் அல்லவா கவருகின்றது 






ரோம மகரிஷி - கேட்கக் கிடைத்தவை :





1. கண்ணகி அம்மன் மதுரையை எரித்து விட்டு,சென்னை வந்த போது,அவரை "வட்டப்பாறை அம்மன் " என்ற அருள் நிலையில் ரோம மகரிஷி வடிவுடையம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்.மேலும் அம்மனின் உக்கிரத்தை குறைக்க,ஸ்ரீ ஆதி சங்கரர் இங்கே வந்து,ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து,சாந்த சொரூபிணியாக மாற்றியதாக தகவல்.

2. திருஒற்றியூர் ஆதிபுரீஸ்வர் கோவிலில் லிங்க பிரதிஷ்டை செய்வதற்கு,தொண்டைமான் சக்ரவர்த்திக்கு உதவினார்.

3. படம்பக்கநாதர் என்ற திருப்பெயரை  ஆதிபுரீஸ்வரருக்கு வழங்கியவர் இவரே.

4. மாசி மக நட்சத்திர நாளில், மகரிஷி சித்தர்களின் நெறிமுறைப்படி இந்த பரவெளியில் கலந்து உள்ளார்கள்.

5. உரோம மகரிஷி,இந்த உலகம் படிக்கப்பட்டது முதல் யுகயுகத்தும் வாழ்கின்ற யோகி ஆவார்

6. உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார்கள்.சதுரகிரியில் இப்போதும் இருந்து அருள் வழங்கி வருவதோடு,18 சித்தர் பெருமக்களுக்கும்குருமுகமாய் இருந்து வருகின்றார்கள்(18 சித்தர்களின் பெயர்கள் ஒவ்வொரு சித்தர் வழியில் மாறுபடும் )

7. திருக்கழுக்குன்றத்தில் உள்ள "சங்கு தீர்த்தம்" இவரால் உருவாக்கப்பட்டது.

8. சதுரகிரியில் உள்ள சுயம்பு இரட்டைலிங்கங்களுக்கு சந்தன மஹாலிங்கம் மற்றும் சுந்தர மஹாலிங்கம் என்ற திருப்பெயர் இவரால் வழங்கப் பட்டது.

9. காசி விஸ்வநாதர் மனித உரு கொண்டு, இங்கே வந்து இவரை தரிசித்தார்.மகரிஷி அவரைக் கண்டு,அதன் பொருட்டு தங்கத்தால் ஆன விஸ்வநாதர் கொண்டு,திருஒற்றியூர் கடற்கரையில் சில யுகங்களுக்கு முன்பு, கோவில் காட்டினார்.அந்த கோவில் கடலிலே பல யுகங்களுக்கு முன்பு உள்வாங்கப்பட்டது.

10. ராமர் மற்றும் ராவணர் இவரை த்த்ரேதா யுகத்தில் தரிசித்துள்ளனர்.பாண்டவர்கள் துவாபர யுகத்தில் தரிசனம் செய்துள்ளனர்

11. இவரின் உடலில் இருந்து ஒரு முடி விழுந்தால் பிரம்மவின் ஆயுள் முடிவதற்கு அர்த்தம்.இது நமது கால அளவில் பல கோடி ஆண்டுகளுக்கு சமம்.தற்போது வரை சில முடிகள் விழுந்துள்ளன.

12. இவர் ராஜ ரிஷி ஆவார்.பற்பல கோவில்களை உருவாக்கியுள்ளார்.

13. தற்போது நீர் வறண்டு காணப்படும் பாலாறு,இவரால் உருவாக்கப்பட்டது.

14. மயில்,காகம்,ஆந்தை,கருடன்,சேவல் முதலிய 5 பறவைகளைக் கொண்டு பஞ்ச பட்சி சாஸ்த்திரம் உருவாக்கியுள்ளார்.

15.  ரோமம் என்றே சொல்லடா ! ரோம பிள்ளை சொல்லடா ..தலைநிமிர்ந்து நில்லடா என்ற புகழ் பெற்ற வரிகள், நாம் அனைவரும் அவரின் பிள்ளைகள் என்பதை நினைவூட்டுகின்றது.

16. முடிவாக, மஹாகுரு அகத்தியர் மற்றும் இடைக்காடர் இங்கே வந்து, ரோம மகரிஷியை வழிபட்டுள்ளார்கள்.

கோவில் அமைவிடம் :

#98, எல்லை அம்மன் கோவில் தெரு,திருஒற்றியூர்,சென்னை -19

எப்படி செல்வது?

திருஒற்றியூரில் உள்ள எல்லை அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.முதலில் அங்கே  சென்று,அந்த தெருவிலே சுமார் 50 மீட்டர் தொலைவு சென்றால் அங்கே,பல கடை மற்றும் வீடுகளுக்கு இடையில் ஒரு கோவிலுக்கான வாயில் இருக்கும். அங்கே வழிகாட்டி பலகையும் இருக்கும்.அதனுள்ளே 3 2 அல்லது 3 வீடுகளுகள் தாண்டி சென்றால், நம் துயர் நீக்க, ரோம மகரிஷி காத்துக் கொண்டிருக்கின்றார்.





முக்கிய அறிவிப்பு :

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 9ம் ஆண்டு விழா வரும் 30.07.2017 ம் தேதி அருள்மிகு மயிலாண்டவர் திருவக்கோவிலில் நடைபெற உள்ளதால் ,அனைவரும் கலந்து கொண்டு ரோம மஹரிஷியின் அருள் பெறும் படி கேட்டுக் கொள்கின்றோம்.விழா அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.












முந்தைய பதிவுகளுக்கு :


மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html